மக்களே அலட்சியம் வேண்டாம்...தனியார் தொழிற்சாலையில் 19 பேருக்கு தொற்று உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2021, 5:44 PM IST
Highlights

கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வருவதை அடுத்து அனைத்து தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் தொடர்ந்து தற்போது தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 19 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வருவதை அடுத்து அனைத்து தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள தனியார்  இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பலருக்கும் பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில், அங்குள்ள 250 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து முதற்கட்டமாக திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பரிசோதனை செய்த 19 பேரும், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது அந்த 19 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் வேலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவுவதால் பொதுமக்கள் வெளி இடங்களில் மாஸ்க் அணிவதையும், கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவதையும் முறையாக கடைபிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

click me!