ஒரே பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா... பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.. பீதியில் பெற்றோர்கள்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2021, 6:40 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடங்கிய சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடங்கிய சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 12 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 220 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் 11 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அந்த பள்ளிக்கு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் (15ம் தேதி முதல் 17ம் தேதி வரை) என 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அப்பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!