வலியில் துடித்த கர்ப்பிணி பெண்..! ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த அசத்திய ஆண் செவிலியர்..!

By Manikandan S R SFirst Published Dec 20, 2019, 12:50 PM IST
Highlights

திருப்பூர் அருகே ஆம்புலன்ஸிலேயே இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர்(30). இவரது மனைவி ரஷ்மிதா ரெட்டி(28). இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் பணி நிமித்தம் காரணமாக தமிழகத்தில் தங்கியுள்ளனர். இந்தநிலையில் ரஷ்மிதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். அருகே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று அவ்வப்போது சிகிச்சை பெற்றிருக்கிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஷ்மிதாவிற்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உறவினர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரஷ்மிதா அதில் ஏற்றப்பட்டார். வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க மருத்துவ உதவியாளர் முத்து கிருஷ்ணன் முடிவு செய்தார்.

சாலையோரமாக வாகனம் நிறுத்தப்பட்டு ரஷ்மிதாவிற்கு பிரசவம் நடந்தது. அதில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும் குழந்தையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகனையும், மருத்துவ உதவியாளர் முத்து கிருஷ்ணனையும் உறவினர்கள் பெரிதும் பாராட்டினர்.

click me!