தனியார் பள்ளி ஆசிரியரை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல்; திருப்பூரில் 3 பேர் அதிரடி கைது

By Velmurugan sFirst Published Dec 9, 2023, 3:53 PM IST
Highlights

திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியரை ஏமாற்றி நிர்வாணப்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். 15 நாட்களுக்கு ஒரு முறை பல்லடத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பின்னர் மேட்டூருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி சனிக்கிழமை சேலம் மேட்டூரில் இருந்து வேலை முடிந்து விடுமுறை தினம் என்பதால் ஊருக்கு திரும்பி உள்ளார்.

அன்று மாலை  திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கிய அவர் பல்லடம் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஆசாமி ஒருவன் நல்லவன் போல நடித்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க ஆசிரியர் குமரேசன், தான் பல்லடம் ராயர்பாளையம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அந்த ஆசாமியும் தானும் பல்லடம் அருள்புரம் வரை செல்ல இருப்பதாகவும் உடன் வந்தால் பைக்கில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியதனை தொடர்ந்து ஆசிரியர் குமரேசன் அவனுடன் பைக்கின் பின்புறமாக அமர்ந்து கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளார்.

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டீக்கடையை சூறையாடிய ஆசாமிகள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

இருசக்கர வாகனம் பல்லடம் திருப்பூர் சாலை அருள்புரம் அருகே சென்ற போது பைக்கை ஓட்டிச் சென்ற மர்ம நபர் தனது நண்பர்களுடன் அவசரமாக பேச வேண்டி இருப்பதாகவும் 2 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று கூறி வாகனத்தை ஆள் நடமாட்டமற்ற இருள் சூழ்ந்த பகுதியில் நிறுத்தியுள்ளான். பின்னர் சற்று நேரத்தில் அங்கு வந்த மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் குமரேசனை கத்தியை காட்டி மிரட்டி அவரது ஆடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். 

மேலும் அந்த புகைப்படங்களை ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் உடனே தங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் தனது செல்போன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 50 ஆயிரத்தை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த ஒருவன் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை விடுவித்துள்ளது. இந்த பிரச்சினையால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய ஆசிரியர் குமரேசன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

கோவையில் கேஸ் டேங்கர் லாரி மீது சுவர் விழுந்து விபத்து; அதிகாரிகளின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பல்லடத்தைச் சேர்ந்த வீரமணி, அர்ஜுன், ஜெகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 30 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மீது நம்பிக்கை வைத்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏறி செல்வோருக்கு என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம்.

click me!