25 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகள்..! பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கையில் மிரண்டு போன அதிகாரிகள்..!

By Manikandan S R SFirst Published Nov 28, 2019, 3:58 PM IST
Highlights

அண்மையில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டிருந்தது. அத்தாளநல்லூரில் காணாமல் போன சிலை வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொன்.மாணிக்கவேல் கையிலெடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது அத்தாளநல்லூர் கிராமம். இங்கு நூற்றாண்டுகள் பழமையான மூன்றீஸ்வரர் கோவில் இருக்கிறது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் இருந்த இரண்டு துவார பாலகர் சிலைகள் கடந்த 1995ம் ஆண்டு திருடு போயின. இதுகுறித்து வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

சிலைகளை பற்றிய எந்த தகவலும் தெரிய வராததால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்துள்ளது. இதனிடையே சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் பதியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டிருந்தது. அத்தாளநல்லூரில் காணாமல் போன சிலை வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொன்.மாணிக்கவேல் கையிலெடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்.

அதனடிப்படையில் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சர்வதேச சிலைகடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூர் மூலமாக 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1 சிலை, 6 மற்றும் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று சிலைகள் கடத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அரசை தொடர்பு கொண்டு சிலை தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்று ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தார். இதன்காரணமாக சிலைகளை திருப்பி அளிக்க ஆஸ்திரேலியா அரசு ஒத்துக்கொண்டது.

ஜனவரி மாதத்தில் சிலைகள் தமிழகம் வர இருப்பதாகவும் அதை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள் சொந்த ஊர் திரும்ப இருப்பதால் கிராம மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

click me!