எந்த வயசுக்காரங்க எப்போ டாஸ்மாக் வரணும்..? கூட்டத்தை தவிர்க்க அரசு அறிவித்த அசத்தல் திட்டம்..!

By Manikandan S R SFirst Published May 6, 2020, 1:13 PM IST
Highlights

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக வயது அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 711 இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் சரக்கு விலை அதிரடி உயர்வு..! குடிமகன்கள் பேரதிர்ச்சி..!

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக வயது அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 50-வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மது வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  40-50 வயதிற்குள் இருப்பவர்களுக்கு 1 மணி முதல் 3 மணி வரையிலும் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மதுவாங்க வருபவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் டோக்கன் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்படுவதால் குடிமகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

click me!