கல்லூரி விடுதியில் தனிமை வார்டா..? திடீர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்..!

By Manikandan S R SFirst Published Apr 21, 2020, 11:14 AM IST
Highlights

கல்லூரி அருகே இருக்கும் அத்தியூத்து, ஆண்டிபட்டி, முத்துகிருஷ்ணபேரி என சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கல்லூரி விடுதி முன்பாக திரண்டனர். கல்லூரி விடுதியை தனிமை வார்டாக மாற்றக் கூடாது என்றும் மீறினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே தென்காசி அருகே கல்லூரி விடுதி ஒன்றை தனிமை வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் நேற்று அதிகாலையில் வாகனம் ஒன்றின் மூலம் மேலப்பாளையம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அது தொடர்பான தகவல் அறிந்த காவல்துறையினர் கடையநல்லூர் ரயில்வேகேட் அருகே வைத்து 9 பேரையும் கைது செய்து சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தனர். இதையடுத்து 9 பேரையும் ஆலங்குளம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைத்து தனிமை சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

உலகை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்..?

இது குறித்த தகவல் அறிந்ததும் கல்லூரி அருகே இருக்கும் அத்தியூத்து, ஆண்டிபட்டி, முத்துகிருஷ்ணபேரி என சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கல்லூரி விடுதி முன்பாக திரண்டனர். கல்லூரி விடுதியை தனிமை வார்டாக மாற்றக் கூடாது என்றும் மீறினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவான பூங்கோதை ஆலடி அருணா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி விடுதியில் 9 பேரையும் தனிமைப்படுத்த கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய அரசு அதிகாரிகள் 9 பேரையும் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!