உயிரிழந்த தந்தை..! பக்கத்து மாவட்டதில் இருந்தும் பார்க்க முடியாமல் பரிதவித்த மாற்றுத்திறனாளி பெண்..!

By Manikandan S R SFirst Published Apr 13, 2020, 11:01 AM IST
Highlights

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது செங்கோட்டை செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளி தம்பதிகள் விண்ணப்பிக்கும் போது தவறாக விண்ணப்பித்த காரணமாகவே அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் நேரடியாக வந்து நிலைமயை கூறவே அவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டு செங்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இருக்கும் கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(27). இவரது மனைவி விக்னேஸ்வரி(27). இவர்கள் இருவருக்கும் வாய் பேசமுடியாது மற்றும் காது கேட்கும் திறனும் கிடையாது. மாரீஸ்வரன் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர் திருநெல்வேலிக்கு திரும்பினர்.

விக்னேஷ்வரியின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனிடையே அவரது தந்தை செண்பகம் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்தார். இதனால் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விக்னேஷ்வரி தனது கணவர் மாரீஸ்வரனுடன் கிளம்பினார். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கவே வாடகை கார் ஒன்று மூலமாக இருவரும் செங்கோட்டைக்கு செல்லத் தயாராகினர். இணையதளம் மூலம் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பித்த போது அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அனுமதி பெற முயற்சித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் மாவட்ட ஆட்சியரை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தன்னார்வலர்கள் சிலர் மூலம் மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து நிலைமையை கூறினர். அவர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சில்பாவிடம் சம்பவத்தை கூறி அனுமதி பெற்று கொடுத்தார்.

அதுமட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் மூலமாகவே ஒரு காரில் இருவரையும் செங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது செங்கோட்டை செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளி தம்பதிகள் விண்ணப்பிக்கும் போது தவறாக விண்ணப்பித்த காரணமாகவே அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் நேரடியாக வந்து  நிலைமயை கூறவே அவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டு செங்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். தந்தை இறந்த தகவல் அறிந்து அவரது மகள் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்ததும், தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக உதவிய சம்பவம்  விக்னேஷ்வரியின் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!