
திருநெல்வேலி மாநகரை ஒட்டிய கேடி சி நகரை அடுத்த கீழநத்தம் ஊராட்சி மங்கம்மாள் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் அரசம்மாள் (வயது 70) மகனின் வீட்டிலேயே தனியாக ஒரு அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை தீயணைப்புக்கு வந்த அழைப்பில், கேடிசி நகர் அருகே மங்கம்மாள் சாலை பகுதியில் சிலர் தீயில் சிக்கிக் கொண்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் ஏணிப்படிக்கு கீழே விறகுகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை முதலில் அணைத்தனர். இதையடுத்து, அங்கு கருகிய நிலையில் உடல் இருப்பதைக் கண்டு பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனை… ஆத்திரத்தில் எடுத்த முடிவால் சோகம்!!
விசாரணைக்குப் பின்னர், தீ ஜுவாலைக்குள் சிக்கிக்கொண்டது மூதாட்டி அரசம்மாள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவரது மகன் அண்ணாமலையிடம் போலீசார் விசாரித்தனர். இதில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட மூதாட்டி, விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றது எவ்வாறு? அலறல் சத்தம் எதுவும் அருகில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லையா? மூதாட்டி தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேறு யாரேனும் மூதாட்டியை கொலை செய்து, பின்னர் உடலை விறகுகள் நிறைந்த பகுதியில் போட்டு எரித்துவிட்டனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, மாமியார் மருமகள் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான், ஒரே வீட்டில் தனி அறையில் மூதாட்டி வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் 174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிந்த நிலையில் உடலின் பாகங்களை ஆய்வுக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.