ஏலே! நாங்க கட்சியாரம்பிச்சது ஏன்னு தெரியுமாலே...? ராக்கெட் ராஜாவின் ரகளை ரவுசு..!

By Vishnu PriyaFirst Published Mar 16, 2019, 4:42 PM IST
Highlights

’பனங்காட்டு மக்கள் கழகம்’-தென் தமிழ்நாட்டை அவ்வப்போது தெறிக்கவிடும் சுபாஷ் பண்ணையார் துவங்கியிருக்கும் புதிய கட்சி (!?) இது. இதன் இளைய தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் ராக்கெட் ராஜா.

’பனங்காட்டு மக்கள் கழகம்’-தென் தமிழ்நாட்டை அவ்வப்போது தெறிக்கவிடும் சுபாஷ் பண்ணையார் துவங்கியிருக்கும் புதிய கட்சி (!?) இது. இதன் இளைய தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் ராக்கெட் ராஜா. யார் இந்த ராக்கெட் ராஜா? என்று தெரியவேண்டுமானால், தென் தமிழகத்தின்  சென்சிடீவ் காவல் நிலையங்கள் சிலவற்றை ஏறியிறங்குங்கள் அப்ப புரியும் அர்த்தம். அப்பேர்ப்பட்ட ராக்கெட் ராஜா, இளைய தலைவர் ஆன ஜோரோடு தங்கள் கட்சியின் அருமை பெருமைகள் மற்றும் இந்த தேர்தலில் தங்களின் இலக்கு! பற்றி சில தடாலடி ஸ்டேட்மெண்டுகளை தட்டிவிட்டிருக்கிறார். அதன் ஹைலைட்ஸ் இதோ... 

* தேர்தல் சமயத்துல நாங்க கட்சி ஆரம்பிச்சிருக்கிறது பணம் பறிக்க இல்ல. எங்க  சாதி சங்கம் கொடுக்குற பணத்தை வெச்சுதாம்ல பல பேர் இங்கே கட்சிகளையே நடத்திட்டு இருக்கானுவ. 

* எங்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி ரெண்டு மாவட்டத்துலேயும் நிறைய ஆதரவாளருங்க இருக்கானுவ. ஆனா அங்கே கட்சியை துவக்குறத விட, சம்பந்தமேயில்லாத சேலத்துல கூட்டத்த கூட்டி தெறிக்க விட்டோம் பாரு! அதாம்லே மேட்டரு. 

* எங்க கட்சியோட பெயருக்கு அர்த்தம் புரியாம செல பேரு முழிக்கானுவ. பனங்காட்டு நரி! எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. அதமாதிரி எங்களின் படையும் எதுக்கும் அஞ்சாதுன்னு காட்டத்தான் இந்த பெயரு. எப்படி அள்ளுதுல்ல?

* எங்க சமுதாயத்து மக்களை போலி வாக்குறுதி கொடுத்து பல வருஷமா வாக்கு கொட்டும் மெஷினா சில பெரிய கட்சிகள் யூஸ் பண்ணிட்டு இருந்தாவ. அதுக்கு செக் வைக்கத்தான் இந்த புது கட்சி. இனி நாங்க யாருன்னு நிரூபிப்போம். 

* என் மீது போலீஸ்காரங்க போட்டிருக்கும் கேஸுக்கு பயந்து நான் கட்சி ஆரம்பிக்கல. என் கேஸை சந்திக்க தைரியமான வக்கீலு போதும்லே. 

* நான் என்கவுண்டருக்கு  பயந்து கெடக்குறதா சில பேர் பேசிக்கிறானுவ! முன்னாடி அப்படியொரு சூழ்நிலை இருந்துச்சு. ஆனா இப்ப அப்படியொரு ஃபீலிங்கே கெடயாதுல. 

* நானும், சுபாஷ் பண்ணையாரும் கட்சி ஆரம்பிச்சு ‘ரெட்டை குழல் துப்பாக்கி’ மாதிரி நிக்குறோம். எங்க கட்சியோட முக்கிய கொள்கை என்ன தெரியுமால? எங்கள் சமுதாயத்து மீது அடிக்கடி பொய்யா வன்கொடுமை வழக்கை பயன்படுத்துற ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தென்காசி தொகுதியில படு பயங்கரமான வாக்கு வித்தியாசத்துல தோக்கடிக்குறதுதாம்லே! சூப்பருல!

click me!