தெறிக்கவிடும் திருநெல்வேலி..! 63ல் 57 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம்..!

By Manikandan S R SFirst Published Apr 25, 2020, 8:50 AM IST
Highlights

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு 63 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வரை 57 பேர் வைரஸின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். 

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நேற்று 72 பேருக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சுகாதரத்துறையினர் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது ஆறுதல் அளித்து வருகிறது.

தற்போது வரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 866 பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் செய்தியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு 63 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வரை 57 பேர் வைரஸின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் 35 பேர் குணமடைந்து ஏற்கனவே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு உயிர் போனாலும் தாங்க முடியாது.. தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க..! வேதனை தெரிவித்த ஓ.பி.எஸ்..!.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக 20 பேர் பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று வெளியான அறிவிப்பில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இதுவரை சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 57 பேர் கொரோனா நோயை வென்று வீடு திரும்பி இருக்கின்றனர். அவர்களை மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் என ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து கைதட்டி, பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியாலும் நோயாளிகளின் ஒத்துழைப்பாலும் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்தவர்களில் 90 சதவீதம் பேர் வெற்றிகரமாக மீண்டுள்ளனர். மீதும் இருக்கும் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!