நெல்லையில் இருசக்கர வாகனம், வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

By Velmurugan sFirst Published Jul 20, 2023, 10:38 PM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனம் மீது  வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் (வயது 18) மற்றும் உச்சிமாகாளி (18). இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இன்று கல்லூரி முடிந்ததும் அவர்கள் இருவரும்  தங்களது இரு சக்கர வாகனத்தில்  சங்கரன்கோவில் சாலை வழியாக அவர்களது ஊருக்கு சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக அழகிய பாண்டியபுரம் அருகே இருசக்கர வாகனம் வரும்போது எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் காவல் துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று  விசாரணை மேற்கொண்டனர். 

அதிகாரிகள் அமைச்சரிடம் பொய்யான தகவலை வழங்குகின்றனர் - டெட்ரா பேக் குறித்து தங்கமணி கருத்து

மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் இருவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வாகனத்தில் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதா அல்லது வேன் ஓட்டுனர் கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனத்துறையினரின் சொல்பேச்சை கேட்டு சாலையைக் கடந்த குறும்புக்கார காட்டு யானை

click me!