தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து முழுமையா மீண்ட அடுத்த மாவட்டம்

By karthikeyan VFirst Published May 1, 2020, 7:54 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மாவட்டமாக தேனி உருவெடுத்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 203 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2526ஆக அதிகரித்துள்ளது. இதில் 1082 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. 

தமிழ்நாட்டில் ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்டன. ஆனால் நேற்று கொரோனாவிலிருந்து மீண்ட கரூரில் இன்று ஒருவருக்கு தொற்று உறுதியானதால் கொரோனா இல்லாத மாவட்டம் என்ற பெருமையை இழந்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. எனவே கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்ந்து நீடிக்கிறது. ஈரோட்டில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 69 பேர் குணமடைந்து ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானது. 

ஈரோட்டை தொடர்ந்து நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்ததையடுத்து அந்த மாவட்டமும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டமானது. இதையடுத்து கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டங்களாகின. 

கரூரில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடைசி நபரும் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டம் என்ற பெருமையை கரூரும் பெற்றது. ஆனால் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த பெருமையை இழந்தது. 

இந்நிலையில் தேனி மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்களில் 37 பேர் ஏற்கனவே கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்த நிலையில்  எஞ்சிய 5 பேருக்கும் இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானதால் அவர்களும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். எனவே தேனி மாவட்டமும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. 

ஆனால் கொரோனா இல்லாத இதே நிலை நீடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது. அரசின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடந்தால் தேனி மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக பாதுகாக்கலாம். 
 

click me!