திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை.. சிறுவன் உள்பட 3 பேர் கைது..!

By vinoth kumarFirst Published Jul 8, 2021, 4:32 PM IST
Highlights

தமிழழகியின் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இருவீட்டாரின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன்(31). இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த துரை மகள் தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. பாலமுருகன் சிங்கப்பூர் சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்த தமிழழகி கடந்த 3-ம் தேதி இரவு தான் குடியிருந்து வந்த வாடகை வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழழகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தமிழழகியின் உள்ளாடையில் ஒரு கடிதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தமிழழகி தங்கியிருந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாலும், அதனை பொருத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொள்ளவுள்ளதாகவும் எழுதி வைத்திருந்தார். மேலும் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர்களின் பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து, தமிழழகியின் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இருவீட்டாரின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆவணம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஆகாஷ்(21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன்(28)) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!