தஞ்சையில் கோர விபத்து; பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி உள்பட 2 பேர் பலி

By Velmurugan sFirst Published Mar 14, 2023, 10:47 AM IST
Highlights

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாமரத்தில் இருசக்கர வாகனம் மோதி 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாணவி உள்பட இரண்டு பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17). இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு எழுதிவிட்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மாணவியின் உறவினரான தாளக்குடியைச் சேர்ந்த பிரதீப் (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் மாணவி விஷாலியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லிச்சேரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த மாமரத்தில் மோதி இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. 

நடத்தையில் சந்தேகம்; தூங்கிக்கொண்டிருந்த மருமகள் முகத்தில் ஆசிட் ஊற்றிய மாமியார் கைது

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் மற்றும் பள்ளி மாணவி விஷாலி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது

click me!