மிரட்டும் மழை... விரட்டும் மஹா புயல்... 4 நாட்கள் உஷார் மக்களே..!

By Thiraviaraj RMFirst Published Oct 31, 2019, 6:14 PM IST
Highlights

லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் மையம் கொண்டுள்ளது. இதற்கிடையே, அரபிக் கடலில் தற்போது உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஓமன் நாடு சூட்டிய பெயர்.  இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக் கடலில் தற்போது உருவான புயலுக்கு 'மகா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. புயல் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீ. ஆக இருக்கும் என தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் கூறுகையில், அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக உரு மாறியுள்ளது. எனவே, 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடல் காற்றின் வேகம் 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகம் இருக்கலாம்  என தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் உருவாகியுள்ள நிலையில் நேற்று இரண்டாவதாக மஹா புயல் உருவானது.

click me!