காதலியோடு சாலைகளில் சுற்றும் சேலம் 2k கிட்ஸ்..! திருந்தாத ஜென்மங்கள்..!

By Manikandan S R SFirst Published Mar 30, 2020, 12:59 PM IST
Highlights

இளம் காதல்ஜோடிகள் ஆள் இல்லாத சாலைகளில் சுற்றித்திரிவதை காண முடிவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அனைத்து சந்து பொந்துகளில் சுற்றித்திரியும் இளம் காதல் ஜோடிகள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோரை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற மத்திய அரசு எச்சரித்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக சேலத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் சந்தைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்குவதற்காக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து 144 தடை உத்தரவை மதிக்காமல் சாலையில் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சேலத்தில் 144 தடை உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள் சாலைகளில் நண்பர்களுடன் செல்பி எடுப்பதற்காக சுற்றி பார்ப்பதற்காகவும் வெளியே வந்த வண்ணம் உள்ளனர்.

 

இதுஒரு புறம் இருக்க இளம் காதல்ஜோடிகளும் ஆள் இல்லாத சாலைகளில் சுற்றித்திரிவதை காண முடிவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அனைத்து சந்து பொந்துகளில் சுற்றித்திரியும் இளம் காதல் ஜோடிகள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோரை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இவை மட்டுமல்லாமல் சில பெற்றோர் விபரீதம் உணராமல் தங்கள் குழந்தைகளுக்கு காலியாக இருக்கும் சாலைகளை சுற்றி காட்டவும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவும் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் இப்படியே தொடர்ந்தால் 144 தடையுத்தரவு கேலியாக மாறிவிடும் என்றும் இதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவும் வாய்ப்பு இருப்பது வாய்ப்பிருக்கிறது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறாக பொறுப்பின்றி சுற்றும் நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சேலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவை என்று தெரிந்த 10700 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பிற மாநிலங்களை போல இனி கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!