உயரத்தை அதிகரிக்க தலையில் பபுள்கம் ..! காவலர் தேர்வில் நடந்த விசித்திர சம்பவம்..!

By Manikandan S R SFirst Published Nov 9, 2019, 1:04 PM IST
Highlights

காவலர் பணிகளுக்கான உடற்தகுதி தேர்வில் உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக வாலிபர் ஒருவர் தலையில் சுவிங்கத்தை ஒட்டி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் இருக்கும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  காலியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி தற்போது உடற்தகுதி தேர்வு நடக்கிறது. மொத்தம் 555 பேருக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது. இதற்காக பலர் அதிகாலை முதலே ஆயுதப்படை மைதானத்தில் குவிந்து வந்தனர். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உயரம் அளவீடுதல், மார்பளவு அளவீடுதல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது.

இந்த தேர்வில் வாலிபர் ஒருவர் உயரத்தை அதிகரிப்பதற்காக தலையில் சுவிங்கத்தை ஒட்டி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி(22) என்கிற வாலிபரும் வந்திருந்தார். உடற்தகுதி தேர்விற்கு வந்திருந்த அவரின் உயரத்தை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவரது தலையில் வித்தியாசமாக ஏதோ தென்பட்டது. தலைமுடி அதிகமாகவும், அதற்குள் ஏதோவொரு பொருள் இருப்பது போலவும் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் வாலிபரின் தலைமுடியை கலைத்து பார்த்தனர். அப்போது அவர் தலைக்குள் சுவிங்கத்தை உருண்டையாக ஒட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், காவல்துறையில் தேர்வாக 170 சென்டிமீட்டர் இருக்கவேண்டிய நிலையில் அவர் 169 சென்டிமீட்டர் தான் இருந்துள்ளார். இதனால் உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக தலையில் சுவிங்கத்தை ஒட்டி வந்துள்ளார். இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். 

click me!