260 ஆடுகள்.. நாட்டுக்கோழிகள்..! முனியப்பசாமிக்கு தடபுடலாக நடந்த பிரம்மாண்ட படையல் திருவிழா..!

By Manikandan S R SFirst Published Feb 17, 2020, 3:38 PM IST
Highlights

திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை 260 ஆடுகளை நேர்த்திக்கடனாக முனியப்பசாமிக்கு பக்தர்கள் பலி கொடுத்தனர். பின் அசைவ உணவு தயார் செய்யப்பட்டு சுவாமி முன்பாக படைக்கப்பட்டது. அப்போது நடந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அருகே இருக்கும் சாரணர்பாளையத்தில் இருக்கிறது திருப்பதி முனியப்ப சாமி திருக்கோவில். இங்கு சுமார் 47 அடி உயரத்தில் முனியப்ப சாமி சிலை நிறுவப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களுக்கு குலதெய்வ கோவிலாக இது அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடம் மாசி மாதத்தில் வருகிற முதல் ஞாயிற்று கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு முனியப்பசாமிக்கு படையல் படைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.

இந்த வருடத்திற்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை 260 ஆடுகளை நேர்த்திக்கடனாக முனியப்பசாமிக்கு பக்தர்கள் பலி கொடுத்தனர். பின் அசைவ உணவு தயார் செய்யப்பட்டு சுவாமி முன்பாக படைக்கப்பட்டது. அப்போது நடந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பூஜைக்கு பின்னர் படையல் பிரிக்கப்பட்டு மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் திரளாக பங்கேற்றனர். திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று நாட்டுக்கோழி விருந்தும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

சத்துணவு திட்டமா இல்ல மனுதர்ம உணவு திட்டமா..? தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த வைகோ..!

click me!