மஞ்சுவிரட்டில் மாடு குத்தி இறந்த காவலர்! இறுதி ஊர்வலத்தில் உடலை ஏந்தி சென்ற மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே!

By Dinesh TGFirst Published May 5, 2023, 10:35 AM IST
Highlights

திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு குத்தி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க காவலரின் உடல் காவர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி LN புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் மீமிசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. திருமயம் அருகே கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த காவலர் நவநீதகிருஷ்ணன், மைதானத்தில் பாதுகாப்பின்றி இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவிழ்த்து விடப்பட்ட காலை ஒன்று காவலரை முட்டி குத்தியது. உடனடியாக, காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காவலர் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



அவரது உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்திருந்த காவல் கண்காணிப்பாளர், காவலரின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு சென்றிருந்தார். தொடர்ந்து, LN - புரம் பகுதியில் காவலரின் வீட்டில் இறுதி மரியாதை செய்யப்பட்டது அப்போது காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவலர் நவநீதகிருஷ்ணனின் உடலை தோளில் சுமந்தபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து வாராப்பூர் மயான கரையில் காவலருக்கு போலீசார் மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க நவநீதகிருஷ்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணனின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார் அதில் அரசு அறிவித்திருந்த 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

click me!