சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..!

Published : Jun 14, 2020, 01:08 PM IST
சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..!

சுருக்கம்

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலை சேர்ந்த நாகேஷ்வரனின் மகள் சாவித்ரி (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், சாவித்ரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து, அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

இதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் கூறினர். அப்போது, சாவித்திரி நான் பெற்றோருடன் செல்லமாட்டேன். என்னை அடித்து கொன்றுவிடுவார்கள் என்று போலீசிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் , பெற்றொருடன் அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், கடந்த10ம் தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரித்துவிட்டனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த காதலன் விவேக் நேற்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சாவித்திரி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
டாஸ்மாக் ஊழல்! டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோல திமுக தோற்கும்! டிடிவி. தினகரன்!