புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு; ஆத்திரத்தில் காளையை அவிழ்த்த உரிமையாளர்

By Velmurugan sFirst Published Jan 6, 2023, 11:07 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு போட்டி இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உரிமையாளர் ஒருவர் தனது காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த தச்சன்குறிச்சி கிராமத்தில் அடைக்கல மாதா தேவாலயத் திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி 2ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடப்பாண்டில் கொண்டுவரப்பட்டுள்ள சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜல்லிக்கட்டு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி; பெரியார் பல்கலை. சாதனை

ஒத்தி வைக்கப்பட்ட போட்டி ஆட்சியர் கவிதா ராமு, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று (6ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டிக்காக வெளியூர், உள்ளூரைச் சேர்ந்த 400க்கும் அதிகமான காளைகள், 300க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர்.

மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தேதி குறிப்பிடாமல் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆப்ரிகன் பன்றி காய்ச்சல்; வளர்ப்பு பன்றிகளை விற்க தடை

ஆட்சியரின் அறிவிப்பு மிகவும் தாமதமாக வெளியானதால் இதனை அறியாத வெளியூரைச் சேர்ந்த மாடு உரிமையாளர்கள், வீரர்கள் இன்று காலை மைதானத்திற்கு வந்தனர். பின்னர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், காளை உரிமையாளர் ஒருவர் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட தனது காளையை போட்டிக்காக அவிழ்த்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த வீரர்கள், உரிமையாளர்கள் கலைக்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

click me!