நைட்டோடு நைட்டாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்.. ஐஜேகே-வினரை சுத்துப்போட்ட தேர்தல் பறக்கும் படை!

By vinoth kumarFirst Published Apr 19, 2024, 6:35 AM IST
Highlights

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து புலிவலம் அருகே  மன்பாரை ரோடு பகுதியில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

திருச்சி அருகே  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த ஐஜேகே-வினரை தேர்தல் பறக்கும் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த பணம்,  கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து புலிவலம் அருகே  மன்பாரை ரோடு பகுதியில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், இரண்டாம் நிலை காவலர் புவனேஷ்வரி ஆகியோர் நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில் மாருதி எர்டிகா கார் ஒன்றில் பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த ஐஜேகேவினரை கையும் களவுமாக பிடித்தனர். 

அப்போது பறக்கும் படையினரை கண்டதும் ஒருசில நபர்கள் பணத்துடன் தப்பி காட்டு பகுதிக்குள் சென்றனர். மேலும் சிலர் பணத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து காரில் இருந்த  ஐஜேகேவினர் கார்த்திக், பிரபு, அண்ணாமலை, தண்டபாணி, ஆகியோரை சுற்றி வளைத்த தேர்தல் படையினர் ஐவரையும் சோதனை மேற்கொண்டனர். 

சோதனையில் காரில் ஐஜேகே வாக்குறுதி புத்தகம்  கட்டாகவும் , பூத் ரசீது மற்றும் ரூ.38 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் கார், இருசக்கர வாகனம், ஐஜேகே வாக்குறுதி புத்தகம், 38 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் பணியிலிருந்த ரெக்கார்டு கிளர்க் பிரபாகரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் விசாரணையில் பாஜக கூட்டணியில் உள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருக்காக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்தது தெரியவந்தது.

click me!