எனது சாவிலாவது நீங்கள் ஒன்று சேருங்க.. பெற்றோருக்காக உயிரை விட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவன்.!

By vinoth kumarFirst Published May 17, 2022, 2:01 PM IST
Highlights

கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களின் மகன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதன்காரணமாக தருண் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராசிபுரம் அருகே தனது தாய் - தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டுமென கடிதம் எழுதி வைத்து விட்டு 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). டிரைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா (40). இவர்களுக்கு நர்மதா என்ற மகளும், தருண் (17) என்ற மகனும் உள்ளனர். தருண் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களின் மகன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதன்காரணமாக தருண் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் அவனது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது மாணவன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை சேர்த்துவைக்க மாணவர் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருண் தற்கொலை செய்யும் முன்பாக உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், எனது சாவிலாவது பெற்றோர் இணைந்து வாழவேண்டும் என்று உருக்கமான கடிதம் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

click me!