அரசு பேருந்து மோதி பலியான மாணவி..! பைக்கில் அழைத்து சென்றவர் தற்கொலை செய்த பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Feb 10, 2020, 12:19 PM IST
Highlights

மகரஜோதியின் இறுதிச்சடங்குகளுக்கு பிறகு வீரமணி தொடர்ந்து மனவேதனையில் இருந்த வீரமணி தன்னால் தான் மகரஜோதி உயிரிழந்ததாக மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வீரமணி(50). இவரது நண்பர் மதியழகன்.  இவருக்கு மகர ஜோதி என்கிற மகள் இருக்கிறார். 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல பள்ளிக்கு மகர ஜோதி கிளம்பியுள்ளார். பள்ளி வாகனத்தை தவறவிட்டு விடவே வீரமணி அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

வீரமணியின் இருசக்கர வாகனம் சென்ற அதே சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையை வீரமணி கடக்க முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக அரசு பேருந்து வீரமணியின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். படுகாயங்களுடன் மகரஜோதி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். லேசான காயங்களுடன் இருந்த வீரமணி மகரஜோதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வீரமணி கதறி துடித்தார். மாணவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மகரஜோதியின் இறுதிச்சடங்குகளுக்கு பிறகு தொடர்ந்து மனவேதனையில் இருந்த வீரமணி தன்னால் தான் மகரஜோதி உயிரிழந்ததாக மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் அருகே இருக்கும் தோப்பு பகுதியில் வீரமணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தால் மாணவி உயிரிழந்து அந்த வருத்தத்தில் அழைத்து சென்றவரும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'நீ வீட்டை விட்டு வந்துரு.. போயிறலாம்'..! ஆசை வார்த்தைகள் பேசி சிறுமியை மயக்கிய வாலிபர்..!

click me!