Madurai Crime: கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

By Velmurugan sFirst Published Jul 5, 2024, 11:15 AM IST
Highlights

திருமங்கலம் அருகே குழாயடி சண்டையில் தொடங்கிய முன்விரோதம் கொலையில் முடிவடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், பாண்டிச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் குடும்பத்திற்கும், எதிர் வீட்டில் வசித்து வந்த சக்திவேல் என்பவர் குடும்பத்திற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு நடந்துள்ளது. 

அப்போது தொடங்கி அவ்வப்போது இரு குடும்பத்தினருக்கும் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறு, கைகலப்பு என இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரது பிரச்சினையும் அவ்வப்போது கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. காவல் நிலையம் சென்றாலும் தொடர்ந்து அவ்வப்போது தகராறு நடப்பது தொடர்ந்து உள்ளது. 

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்; மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்று 100 ஆடுகளை படையலிட்டு வழிபாடு

இந்த நிலையில் நேற்று மாலை கண்ணன் பணி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசித்து வரும் சக்திவேலின் மனைவி லட்சுமி  தகாத வார்த்தைகளால் கண்ணனை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கண்ணன் அவர்களோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து சண்டையை நிறுத்தி உள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் சகோதரர் சசிகுமார் கூடக்கோவில் காவல் நிலையத்தில் எதிர் வீட்டை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு கம்பு, கட்டையால் தாக்குவதாக புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் சக்திவேல் மனைவி லட்சுமி  மகன் சரத்குமார் ஆகியோர் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். 

இதில் ஆத்திரத்தில் ரஞ்சித் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணன் மீது சரமாரியாக குத்தியுள்ளார். சம்பவத்தை கண்டு சண்டையை தடுக்க முற்பட்ட அவரது சகோதரர் சசிகுமார் மீதும் கத்தியால் குத்தி உள்ளார். சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கண்ணன் அங்கேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

ஆனி அமாவாசை; ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக குவிந்த பொதுமக்கள்

அப்போது கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த சசிகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் இறந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கொலை சம்பவம் தொடர்பாக கண்ணன் மனைவி பாண்டி செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சரத்குமார், அவரது தாயார் லட்சுமி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கண்ணன் மனைவி பாண்டிச்செல்வி, நேற்று மாலை சரத்குமார், தாய் லட்சுமி உள்ளிட்டோர் தங்களை தாக்க முற்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் போலீசார் உரிய நேரத்தில் வராததாலயே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் புகார் அளித்தவுடன் போலீசார் வந்திருந்தால் எனது கணவர் இறந்திருக்க மாட்டார் என குற்றம் சாட்டினார். குழாய் சண்டையில் தொடங்கிய முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடக்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!