24 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Dec 12, 2019, 10:41 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வந்தது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கீழ்திசை காற்று வலுவடைவதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நாளை கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. நாளை மறுதினம் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த 1 வாரமாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!