ஜெயராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ; காவல்துறையிடம் அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவு!!

By Dhanalakshmi GFirst Published Oct 14, 2022, 8:06 PM IST
Highlights

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வந்த ஜெயராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அரசு இழப்பீடு கொடுக்கும் சூழல் ஏற்படும். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான விளக்கமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தென்காசி மாவட்டம் ஆத்துவழி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுனிதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ''எனது கணவர் ஜெயராமன் பொறியியல் தொழில் செய்து வருகிறார். இவர் திருமங்கலம், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை பகுதியில் செயல்படுத்த உள்ள நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி என் கணவர் மீது கிராம தலையாரி புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், எனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது 19ஆம் தேதி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். 

இது சட்ட விரோதமானது. குண்டர் தடுப்பு சட்டத்தில் எனது கணவரை அடைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு.. அக்.28 வரை இளைஞருக்கு நீதிமன்ற காவல்!!

இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஜெயராமன் மீது ஒரு வழக்கு உள்ளது. இது முற்றிலும் தவறானது. இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அரசு இழப்பீடு கொடுக்கும் சூழல் ஏற்படும். அடிப்படை ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இதுகுறித்து விரிவான அறிக்கை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!

click me!