மதுரை ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிகாரிகள்..!

By Manikandan S R SFirst Published Feb 4, 2020, 6:46 PM IST
Highlights

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து
மதுரை கோட்ட ரெயில்வே வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் நாளை (5-ந்தேதி) முதல் மார்ச் 4-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மதுரை- பழனி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56624) வருகிற 12-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே அந்த நாட்களில் ஒரு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் காலை 10 மணிக்கு பழனி செல்லும்.

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56734/ 56735) வருகிற 10-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் மதுரை- விருதுநகர் இடையே இரு மார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்- கோவை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56319/56320) நாளை (5-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் திருப்பரங்குன்றம்- திண்டுக்கல் இடையே இருமார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரெயில் வருகிற 11-ந்தேதி சாத் தூர்- திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மதுரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56723) வருகிற 10, 11, 12 மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் மண்டபம்- ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

 

ராமேசுவரத்தில் இருந்து காலை 11. 15 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56722) வருகிற 13-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பரமக்குடி- ராமேசுவரம் இடையிலும், வருகிற 10, 11, 12 மற்றும் மார்ச் 2, 3-ந்தேதிகளில் மண்டபம்- ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மதியம் 12.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56721) வருகிற 13-ந் தேதி முதல் 29-ந்தேதிவரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பரமக்குடி- ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி- ராமேசுவரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56829/56830) வருகிற 13-ந் தேதி முதல் 29-ந்தேதிவரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மானாமதுரை- ராமேசுவரம் இடையே இரு மார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை-திண்டுக்கல்- மயிலாடுதுறை இணைப்பு ரெயில் (வண்டி எண்: 56822) வருகிற 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, மார்ச் 2, 4-ந்தேதிகளில் திண்டுக்கல்- திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வருகிற 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளில் 1 மணிநேரம் தாமதமாக இயங்கும். பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769/56770) வருகிற 10, 11, 14, 15, 17, 18, 21, 22, 24, 25-ந்தேதிகளில் சாத்தூர்-நெல்லை இடையிலும், 12, 16, 19, 23-ந்தேதிகளில் மதுரை- நெல்லை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 76840) காரைக்குடியில் இருந்து நாளை (5-ந் தேதி) முதல் 29-ந்தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 9.50 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக 10.50 மணிக்கு புறப்படும்.

நெல்லை- ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56826) வருகிற 12-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மதுரை கோட்டத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

click me!