தொடரும் டெங்கு மரணம்..! மதுரையில் 5 வயது சிறுமி பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Dec 9, 2019, 5:52 PM IST
Highlights

மதுரை அருகே டெங்கு பாதிப்பால் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இருக்கும் அரசகுளத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது 5 வயது மகள் சஞ்சனா. சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமியை அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.

இதனால் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், டெங்கு காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் தீவிரம் அதிகமடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளே டெங்கு காய்ச்சலால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தையை நன்கு கவனிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசும் தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் டெங்கு பாதிப்பால் ஒரே நாளில் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!