மாட்டுக்கொட்டகையில் பயங்கர தீ விபத்து..! 40 பசுமாடுகள் உடல்கருகி பலி..!

By Manikandan S R SFirst Published Feb 27, 2020, 4:24 PM IST
Highlights

மதுரை அருகே 40 பசுமாடுகள் தீயில் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது நடுப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பு தொழில் பார்த்து வருகிறார். இவரது பண்ணையில் ஏராளமான ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை பராமரிக்க அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பணியில் இருக்கிறார்.

இன்று காலையில் மாட்டுக்கொட்டகையில் மின் மோட்டாரை இயக்கிவிட்டு பாண்டியன் தோட்ட வேலைகளை கவனிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அதில் கிளம்பிய தீப்பொறி மாட்டுக்கொட்டகையில் இருந்து வைக்கோல்களில் பற்றியது. இதில் கொட்டகை முழுவதும் மளமளவென தீ பிடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் கொட்டகை முழுவதும் தீ பிடித்து எரியவே வெப்பம் தாளாமல் மாடுகள் கதறியுள்ளன.

பசுமாடுகள் அனைத்தும் கட்டிவைக்கப்பட்டிருந்ததால் அவற்றால் தப்பிக்க இயலவில்லை. மாட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சுமார் 40 பசுமாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இது மாட்டு உரிமையாளரை மட்டுமின்றி கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..! காவலர்களை கிறங்கடித்த மனு..!

click me!