பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!

By Velmurugan sFirst Published Jun 9, 2023, 9:47 AM IST
Highlights

கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான குலதெய்வ கோவிலில் பட்டியலின மக்கள் சாமி கும்பிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைத்தனர்.

கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள வீரணம்பட்டியில், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மேலப்பதியை, சுற்றியிருக்கும் எட்டு ஊர்களில், வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. 1500 குடும்பங்களின் குலதெய்வமான இக்கோவில், ஒரு நூற்றாண்டு பழமையானது. கோவில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோவிலின் வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். இந்த வருட திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. முதல் நாள் கரகாட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று பட்டியலினத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவரை உள்ளே விட மறுத்ததுடன், சாமி கும்பிட அனுமதிக்கவில்லை. இச்சம்பவத்தால் இரு தரப்பினரிடமும் பிரச்சினை ஏற்பட்டது.

இருதரப்பினரையும், சமாதானப்படுத்தி கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், கரூர் மாவட்ட ஏடிஸ்பி மோகன், குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பட்டியலின மக்களை சாமி கும்பிட அனுமதிக்கவில்லை என்றால், கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலை பூட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிலுக்கு பூட்டு!
குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலை பூட்டக்கூடாது எனவும், கோவிலுக்குள் எங்களை அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து இரு தரப்பினரிடமும் பேசிய அதிகாரிகள் இப்பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். அதுவரை கோவிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும், கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலுக்கு பூட்டு போட்டனர்.

இன்று மாலை கரகத்தை கரைப்பதாக இருந்த நிலையில், அதிகாரிகளிடம் தகவல் சொல்லாமல் குறிப்பிட்ட சமூகத்தினர் கரைத்துவிட்டனர். கரகத்தை ஏன் எடுத்துச் சென்றீர்கள்? பிரச்சினை இருக்கிறது என்பது தெரிந்தே செய்திருக்கிறீர்கள். அமைதியாக இருந்தால் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு எட்டப்பட்டிருக்கும். அதற்குள் நீங்கள் ஏன் அவசர படுகிறீர்கள்? கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது. சாலையில் வேணா உட்கார்ந்துகொள்ளுங்கள் என கோவிலை நிர்வகித்து வருபவர்களிடம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி கேள்வி எழுப்பினர். கோவில் நிர்வாகத்தினர் நேரம் ஆகிவிட்டதால் தான் கரகத்தை எடுத்ததாக தெரிவித்தனர்.

ஒரு கையில் ஸ்டியரிங், செல்போன், ஹெட்போன், கியர், நடுவுல கொஞ்சம் ஸ்நேக்ஸ்; ஓட்டுநருக்கு சிறப்பு கவனிப்பு

சாமி கும்பிடத்தான் கேட்டோம்

பட்டியலின மக்கள் நாங்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடத்தான் கேட்டோம். அதற்குள் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கரகத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். நாங்கள் சாமி கும்பிட முடியாமல் போய்விட்டது என ஆதங்கப்பட்டனர்.

மேலும் சாலையை மறித்து இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் அமர்ந்தனர். அமைதி பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுப்பதற்கு முன், கோவிலை சார்ந்த சமூகத்தினர் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவிலை திறந்து, கரகத்தை எடுத்து கரைத்துள்ளதை வருவாய் அதிகாரிகள் கண்டித்தனர்.

காவல் துறையினர் பாதுகாப்போடு வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி காளியம்மன் கோவிலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தார். அப்பகுதி மக்கள், வருவாய் அதிகாரிகளையும், காவல் துறையினரையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

click me!