
கரூர்: வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கூட்டம் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் நம் மாநிலத்தை முழுமையாக உலுக்கியிருக்கிறது. மேலும் இந்திய அளவில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ள காட்சிகள் மனதை உலுக்கியது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பவம் நடந்தவுடன் அரசு மருத்துவமனை வந்தடைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுவதை கண்காணித்தார். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பிலும் பாதிக்கப்பட்டோருக்கு முழு உதவிகள் வருகின்றன.
அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக கரூருக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வரும் பொழுது, அவர் கண்ணீர் விட்டுக் கதறினார்.
செந்தில்பாலாஜி மற்றும் அங்குள்ள பிற அரசியல் தலைவர்களும் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர். கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வரும் பலரின் உறவினர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கண்ணீர் மல்கி தங்களின் வேதனையை பகிர்ந்தனர். இந்த காட்சிகள் அனைவரின் மனதை உருக்கியது.
அன்பில் மகேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, “படிச்சு படிச்சு சொன்னேன், கண்டிஷனை சரியா பாலோ பண்ணனும்னு” என்று கண்ணீர் விட்டு அழுதார். அவரது அருகில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கண் கலங்கிய நிலையில் துயரத்துடன் நிற்கிறார்.
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.