"கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா..? போனை வைடா ராஸ்கல்..!" வைரலான ஆடியோ.. பதறியடித்து விளக்கம் அளித்த ஆட்சியர்..!

By Manikandan S R SFirst Published Nov 5, 2019, 12:29 PM IST
Highlights

ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும், செம்பியநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் தான் பேசவில்லை என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தற்போது விளக்கமளித்திருப்பாதக தகவல் வந்துள்ளது.

திருச்சியில் இருக்கும் நடுகாட்டுபட்டியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் கடந்த வாரம் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் ஆழ்துளைக்கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் இருக்கிறது செம்பியநத்தம் கிராமம். இந்த ஊரில் ஆழ்துளைக்கிணறு ஓன்று ஆபத்தான வகையில் மூடப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  கரூர் மாவட்ட ஆட்சியரான அன்பழகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்துளைக்கிணறை மூட கூறுவது போன்ற ஆடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதில் பேசிய இளைஞர் தங்கள் ஊரில் இருக்கும் ஆழ்துளைக்கிணறு மூடப்படாமல் இருக்கிறது என்றும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஆட்சியர் அன்பழகன் அவ்வளவு அக்கறை இருந்தால் நேரில் சென்று வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் புகார் அளிக்கும்படி கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா?.. போனை வைடா ராஸ்கல்" என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்தநிலையில் ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும், செம்பியநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் தான் பேசவில்லை என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தற்போது விளக்கமளித்திருப்பாதக தகவல் வந்துள்ளது.

click me!