கரூரில் மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

By Velmurugan sFirst Published May 31, 2023, 10:12 AM IST
Highlights

குளித்தலை அருகே சவாரிமேட்டில் மாயமான 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக  திமுக பேரூராட்சி கவுன்சிலர்  மற்றும் அவரது மகன் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் கலைவாணி (வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு 16 வயதில் 1 மகள் இருந்துள்ளார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் (திமுக) குணசேகரன் மகன் கஜேந்திரன் (18) இருவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த காதலுக்கு கஜேந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிறுமி தேவிகாவுக்கு கஜேந்திரன் போன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியதன்பேரில் தேவிகா, அவரது அக்கா இருவரும் காதலன் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றுள்ளனர். அப்போது கஜேந்திரனின் உறவினர்கள் சிறுமி தேவிகாவை தாக்கியுள்ளனர், அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து தனது உறவினர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

Crime: நெல்லையில் ஆண் வேடமிட்டு மாமியரை கொலை செய்த மருமகள்

தொடர்ந்து தேவிகாவின் உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தேவிகா இங்கு வரவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் தேவிகாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மறுநாள் 25ம் தேதி தனது மகளைக் காணவில்லை என சிறுமி தேவிகாவின் தாயார் கலைவாணி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் 26ம் தேதி காலை 7 மணி அளவில் சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக மிதந்துள்ளார். குளித்தலை காவல்துறையினர், முசிறி தீயணைப்புத் துறையினர் இணைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 வயது குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை; கவனக்குறைவால் நேர்ந்த சோகம்

அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். மேலும் சிறுமியின் பிரேத பரிசோதனையில் தற்கொலை என்று மருத்துவர் கூறியுள்ளார். அவரை கொலை செய்து தான் கிணற்றில் வீசியுள்ளனர். எனவே மற்றொரு மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்டதாக கூறினால் அவரின் தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து குளித்தலை காவல்துறையினர் சிறுமியின் காதலன், தந்தை திமுக பேரூராட்சி கவுன்சிலர் குணசேகரன் (53). காதலனின் மாமா முத்தையன். காதலன் கஜேந்திரன் ஆகிய மூன்று நபர்களையும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

click me!