சந்தேக கணவனின் தொல்லை தாங்காமல் குழந்தையுடன் கடலில் குதித்து பட்டதாரி பெண் தற்கொலை

By Velmurugan sFirst Published Feb 27, 2023, 1:41 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வெளிநாட்டு கணவருக்கு பயந்து பட்டதாரி பெண் 3 வயது குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின். விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக வேலை பார்க்கும் இவர் ஐரோணிபுரம் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான சசிகலா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது மெல்வின் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி சசிகலா மற்றும் மகன் மாமூட்டுக்கடை பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெல்வின், மனைவி சசிகலாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி போன் செய்து தகறாறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சசிகலா தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்தால் கூட சந்தேகத்தில் யாருடன் சுற்றி வருகிறாய் என தகாத வார்த்தைகளால் வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சசிகலாவுக்கு போன் செய்த மெல்வின் தகறாறில் ஈடுபட்டதோடு இரண்டு நாட்களில் ஊருக்கு வர உள்ளதாகவும் அப்போது எல்லாம் தெரிய வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் சந்தேக கணவனின் மிரட்டலால் அச்சமடைந்த சசிகலா ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பகுதியைச் சேர்ந்த மாற்று திறனாளி பிரபா குமார் என்பவரின் ஆட்டோவை சவாரிக்கு அழைத்து தனது 3 வயது மகனுடன் ஐரோணிபுரத்தில் உள்ள தாய் பாமா வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

துபாய்க்கு சென்ற காரைக்கால் நடன மங்கை மர்ம மரணம்; ஆட்சியரிடம் கோரிக்கை

தாய் பாமா தனது மகளுடன் காப்பிக்காடு பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவரிடம் சென்று தனது மகளின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் தாய் பாமாவை வீட்டிற்கு அனுப்பி வைத்த சசிகலா ஆட்டோவில் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றுள்ளார். ஆட்டோ குளச்சல் அருகே வெட்டுமடை பகுதியில் வரும் போது ஓட்டுநரிடம் ஆட்டோவை நிறுத்த சொல்லி மகனுடன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு குழந்தையுடன் கடலில் சென்று கைகழுவி வருவதாக கூறி சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த மாற்று திறனாளியான ஆட்டோ ஓட்டுநர் அந்த வழியாக வந்த மீனவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடற்கரையில் சென்று பார்த்த போது சசிகலா கடலில் குதித்து சடலமாக மிதந்த நிலையில் குழந்தை மாயமானது.

கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை; ஒருவர் கைது

இதனையடுத்து சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் சசிகலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மாயமான குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

click me!