சூடான் தீ விபத்தில் தமிழக இளைஞர் பலி..! வேலைக்கு சென்ற ஒரே மாதத்தில் நிகழ்ந்த பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Dec 9, 2019, 6:14 PM IST
Highlights

சூடான் நாட்டில் நடந்த தீ விபத்தில் விருதாச்சலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

விருத்தாசலம் மாவட்டம் செம்பளாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினரின் இளைய மகன் ஜெயக்குமார். வெகுநாட்களாக வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் சூடான் நாட்டில் இருக்கும் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார் ஜெயக்குமார். அங்கிருந்து சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு கொடுப்பதற்காக திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் ஜெயக்குமார் வேலைபார்க்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி பல இந்தியர்கள் பலியாகி உள்ளனர். தீ விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக அங்கிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்ததாக அவருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

அவரது இறப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் இந்திய தூதரகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சம்பாதிக்க சென்ற ஒரே மாதத்தில் தீ விபத்தில் சிக்கி ஜெயக்குமார் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை மீளாத சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

click me!