சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சுயமாக முடிவெடுப்பது நல்லதல்ல… அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை

By Velmurugan sFirst Published Jun 26, 2023, 5:32 PM IST
Highlights

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சுயமாக முடிவெடுப்பது நல்லதல்ல என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருப்பவர்களின் பணியாக இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள். சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 2023ம் ஆண்டு வரை ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய பணிக்கு கால அளவு இருப்பதால் அது குறித்த பணிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ரூ.12 கோடி செலவில் இரண்டு பணிகளுக்கு தற்போது, ஆறு கோடி அளவிற்கு அனுமதிக்கு சென்றுள்ளது. எனவே குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் குடமுழுக்கு நடத்துவதற்கு உண்டான திருப்பணிகள் தொடங்கப்படும்.

திடீரென களத்தில் இறங்கி குப்பைகளை அள்ளிய எம்எல்ஏ ஜிகே மணி

இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பது குறித்து அறிவித்துள்ளோம். அது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக கன்சல்டன்ஷியிடம் வழங்கி இருக்கிறோம். சாத்திய கூறு இருக்குமாயின் இந்த ஆண்டு அதற்கு உண்டான பணிகளை வேகப்படுத்தி பணிகளை தொடங்குகின்ற சூழ்நிலை உருவாக்குவோம்.

அர்ச்சகர்கள் லஞ்சம் கேட்பது குறித்து புகார்கள் வரப்பெற்றால் யார் அந்த தவறில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நிச்சயமாக துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலில் இந்துக்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பதல்ல. இந்துக் கோவில்கள் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வழிபடுவதற்கு, அவர்கள் சம்மதம் தெரிவித்தால். எந்த மதத்தினராக இருந்தாலும் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். 

ஆகவே இந்து கோவில் என்பது இந்துக்களின் அடையாளம். அவர்கள் ஏற்றுக் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு தடை ஏதுமில்லை. எனவே ஒரு சில மதத்தை சார்ந்து அடையாளத்தோடு வரும் போதுதான், இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றது. அங்கே வைக்கப்பட்டிருந்த பலகை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதால், இது பிரித்து பார்க்க வேண்டியதில்லை. திராவிட மாடலை பொறுத்த அளவில் எம்மதமும் சம்மதம், அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன், தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

கள்ளக்குறிச்சியில் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து 3 மணி நேரம் கொடூர தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம், அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

அப்படி இருக்கின்ற போது இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கு இருக்கிறவர்களின் பணியாக இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்வர் வழிகாட்டுதல்படி நிலங்களை மீட்டெடுத்து இருக்கிறோம். அப்படிப் புகார் வரப் பெற்றிருந்தால், வேறு எதுவும் நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டால் அதை மீட்டெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. திருக்கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் நிச்சயமாக அதை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையை துறை மேற்கொள்ளும் என்றார்.

click me!