உயிரைப் பறித்த 'டிக்-டாக்' மோகம்..! குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி..! வைரலான வீடியோ..!

By Manikandan S R SFirst Published Nov 22, 2019, 1:00 PM IST
Highlights

கோவை அருகே டிக் டாக் வீடியோ எடுத்த போது இளைஞர் ஒருவர் குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விக்னேஸ்வரன்(23). அந்த பகுதியில் தறித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். விக்னேஸ்வரன் டிக் டாக் செயலியை அதிகமாக பயன்படுத்தி வந்திருக்கிறார். தினமும் டிக் டாக்கில் தான் நடித்து விடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தநிலையில் தனது நண்பர்கள் சிலருடன் அங்கிருக்கும் குட்டைக்கு குளிக்க சென்றிருக்கிறார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விக்னேஸ்வரன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக விக்னேஸ்வரன் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி விக்னேஸ்வரனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் விக்னேஸ்வரன் இறுதியாக தனது செல்போனில் டிக் டாக் செயலியை பயன்படுத்தியது தெரிய வந்தது. குட்டையில் நீந்தியபடி மாடு ஒன்றின் மீது ஏறி வீடியோ எடுத்துள்ளார். அப்போது தான் தண்ணீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வாலிபர் பலியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

click me!