காதலி மரணத்தால் நொந்து போன வாலிபர்..! பெற்றோரை பரிதவிக்கவிட்டு எடுத்த கோர முடிவு..!

By Manikandan S R SFirst Published Jan 31, 2020, 5:30 PM IST
Highlights

கோவை அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே இருக்கும் சேத்துமாவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி மணிமேகலை. இந்த தம்பதியினருக்கு பாரிமான் வசந்த்(19) என்கிற மகன் இருந்துள்ளார். அங்கிருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் வசந்த் இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 7 வருடங்களாக ஒரு பெண்ணை வசந்த் உயிருக்கு உயிராக காதலித்து வந்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் போது அப்பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயிராக இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகாத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். காதலி இறந்ததை வசந்த்தால் ஏற்று கொள்ள இயலாமல் இருந்திருக்கிறது. எந்தநேரமும் அவரது நினைவாகவே இருந்து வந்துள்ளார்.

சில நாட்களாக வீட்டிலும் கல்லூரியிலும் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலுடன் வசந்த் இருந்திருக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லாத வசந்த் நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வசந்தின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். வசந்த் வீட்டிலும் இல்லாத நிலையில், வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது உடலை கண்டு கதறி துடித்தனர்.

தகவலறிந்து வந்த காவலர்கள், வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:  5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்னும் தப்பில்லையே..! துணை முதல்வரை சந்தித்து சரத்குமார் அதிரடி..!

click me!