தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து..! நடத்துனர் உட்பட இருவர் பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Oct 1, 2019, 5:46 PM IST
Highlights

கோவை அருகே தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர்.

கோவையில் இருந்து பழனிக்கு நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை பழனியைச் சேர்ந்த லட்சுமணன்(45) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக சொக்கலிங்கம்(56) என்பவர் இருந்தார். கோவையில் இருந்து பழனிக்கு இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

பேருந்து பொள்ளாச்சியை அடுத்து இருக்கும் ஊஞ்சவேலம்பட்டி கிராமம் அருகே இரவு வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராதவிதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பயணிகள் பலத்த காயமடைந்து வெளிவர முடியாமல் தவித்தனர். அந்த பகுதியாக சென்றவர்கள் பேருந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கினர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொள்ளாச்சி காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தில் சிக்கிக்கொண்ட பயணிகளை மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் உடுமலை பள்ளபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா(29) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் லட்சுமணன், நடத்துனர் சொக்கலிங்கம், பயணிகள் மோகன் குமார்(45), பாஸ்கரன்(60), அய்யனார்(71) ஆகியோரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து பேருந்தின் நடத்துனர் சொக்கலிங்கம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!