கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற தனி மாநிலம் உருவாக்க மத்திய , மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுப்பதாக அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார் .
கொங்கு மண்டலம் என்பது நீலகிரி, கோவை, திருப்பூர்,
ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பன்னிரெண்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும் . இதனை எல்லாம் சேர்த்து கொங்கு நாடு என்று தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கோரிக்கையில் கூறியிருப்பதாவது :
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்த மண் கொங்கு நாடு . புரட்சி தலைவரையும் , புரட்சி தலைவியையும் அதிகம் நேசித்த மண் .
1994 இல் பத்து லட்சம் பேர் திரண்ட கொங்கு மாநாட்டில் , கொங்கு மாநிலம் உருவாக்கப்படுவதற்கான காரணத்தை விளக்கி கோவை செழியன் பேசினார் . அது கிடப்பில் போடப்பட்டுள்ளது .
இந்தியாவில் பல பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் "ஈரோடு" நகரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்கி அதற்கு "கொங்கு நாடு" என்று பெயரிட வேண்டும்.
உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் கொங்கு மக்களின் வாழ்க்கை தரம் இதன் மூலம் மட்டுமே உயர்ச்சி அடையும் . நிர்வாக வசதிக்காக இந்த பிரிவு அவசியம் . சென்னை தலைநகருக்கான தகுதியை இழந்து வருகிறது .
நாங்கள் பிரிந்து செல்ல நினைத்தாலும் மற்ற மாவட்ட மக்களோடு அன்பாக தான் இருப்போம் . அவர்கள் எங்கள் சகோதரர்கள் தான் .
எனவே மத்திய , மாநில அரசுகள் விரைந்து கொங்கு நாட்டை உருவாக்க வேண்டும் .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .