பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் பேசக் கூடாது என்றும் அவ்வாறு விதியை மீறி நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பேருந்துகளில் முன்பக்க சீட்டில் அமரும் பெண்களிடம் ஓட்டுனர்கள் பேசக்கூடாது என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கழகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேரங்களில் பேருந்து முன்பக்க சீட்டில் நடத்துனர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்னர்.
இந்தநிலையில் பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பெண்களை பேருந்து முன்பக்கம் இருக்கும் நடத்துனர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதித்து, அவர்களுடன் பேசிக்கொண்டே செல்வதால் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதை பரிசீலனை செய்த கோவை மாவட்ட போக்குவரத்து கழகம், பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் பேசக் கூடாது என்றும் அவ்வாறு விதியை மீறி நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்து முன்பக்க இருக்கைகளில் பெண்கள் அமர தற்போது அனுமதிக்கப்படவில்லை. முன்னால் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஓட்டுனர்கள் பேசிக்கொண்டே சென்று முக்கிய நிறுத்தங்களில் கூட பேருந்தை நிறுத்தாமல் செல்வதாலும்,பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் முறையாக கவனிக்காமல் பேருந்தை இயக்குவதாலும் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவே இதுபோன்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.