மனைவி பிரிந்த ஏக்கம்..! சோகத்தில் முதியவர் எடுத்த கோர முடிவு..!

By Manikandan S R SFirst Published Jan 9, 2020, 5:02 PM IST
Highlights

மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல்(85). இவரது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த பிறகு மிகுந்த சோகத்தில் வடிவேல் இருந்திருக்கிறார். அவரை உறவினர்கள் தேற்றியுள்ளனர். எனினும் தனிமையில் இருந்த இவர் சோகமாகவே காணப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில் மனைவி இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டபோதும் அந்த சோகத்தில் இருந்து மீளாத வடிவேல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதற்காக வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தார். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி விழுந்தார். வடிவேலை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் அவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வடிவேல் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டிருக்கிறார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பத்தினர் வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வடிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!