கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம்... உண்மையை வெளியிட்ட சுகாதாரத்துறை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 18, 2021, 4:33 PM IST
Highlights

தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தருமபுரியைச் சேர்ந்த பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதி கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் பிரசாந்திற்கு ஏற்கனவே 21/2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. 3 மாத கைக்குழந்தையான கிஷாந்துடன் பிரசாந்த் சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பி வந்துள்ளார். 

அங்கிருந்து வந்த நாள் முதலே குழந்தைக்கு உடல் நிலைக்கு சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.  இதையடுத்து குழந்தையை அருகில் உள்ள அங்கன் வாடி மைய மருத்துவ முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு குழந்தைக்கு 21/2 மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சளி மருத்து ஒன்றையும் கொடுத்துள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட மூன்றுமணி நேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு போட்ட தடுப்பூசி மருத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தடுப்பூசியால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை  என்றும், நிமோனியா நோய்த்தொற்றால் தான் குழந்தை உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

click me!