அடித்த நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி..! வாகனங்கள் இலவச பயணம்..!

By Manikandan S R SFirst Published Jan 27, 2020, 3:27 PM IST
Highlights

சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்ததால் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து தற்போது வரை வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருக்கிறது பரனூர் சுங்கச்சாவடி. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இங்கு நேற்று அதிகாலையில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில் அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடியை மறித்து நிறுத்தினார். இதனால் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனிடையே அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திரண்டு வந்து தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி அங்கிருந்த சுங்கச்சாவடி அறைகளை அடித்து நொறுக்கினர். இதில் கணினி உட்பட அங்கிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. பின் போலீசார் வந்து நிலையை கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில் சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்ததால் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து தற்போது வரை வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன. சுங்கச்சாவடி சரிசெய்யப்பட்டு இன்னும் ஒரு வாரம் காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரையிலும் வாகனங்களுக்கு கட்டண வசூல் இருக்காது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

click me!