தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்..! எந்தெந்த மாவட்ட மக்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.?

By manimegalai aFirst Published Nov 20, 2021, 5:59 PM IST
Highlights

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் நிரப்பப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் நிரப்பப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வன்னம் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், 2021 – 22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தநிலையில், புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி,  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் எரியூர்,  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மற்றும் வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுரியிலும், இளங்கலை (தமிழ்), இளங்கலை (ஆங்கிலம்), இளம் அறிவியல் (கணிதம்), இளநிலை (வணிகவியல்) மற்றும் இளமறிவியல் (கணினி அறிவியல்) ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதித்தாக தொடங்கப்படும் ஒவ்வரு அரசு அகலை அறிவியல் கல்லூரியிலும் 17 ஆசிரியர்கள், (உதவி பேராசிரியர் பணியிடங்கள் முதல் ஆண்டிற்கு மட்டும்) மற்றும் 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் வீதம் பத்து கல்லூரிகளுக்கும் 170 ஆசிரியர்கள், 170  ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கல்லூரிக்கும், ஓர் ஆண்டுக்கான தொடர் செலவினமாக 21 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் தொடராச் செலவினமாக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் என மொத்தம் 24 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகளில், இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் பெருக்குபவர் ஆகிய பணியிடங்கள் வெளி முகமை மூலம் நிரப்பப்பட வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு கிராமப்புற மக்களுக்கும், கல்லூரி தொடங்கும் இடங்களில் வசிக்கும் மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!