உணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..! எங்கள் உயிர்மொழி..!

By Manikandan S R SFirst Published Feb 21, 2020, 10:34 AM IST
Highlights

நடராசனின் இறுதிஊர்வலத்தில் பேசிய பேரறிஞர் அண்ணா, "அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தையே பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?”

இதே நாள்.. 1952 ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த பெருந்திரள் போராட்டத்தில் தங்கள் தாய் மொழிக்காக இன்னுயிரை ஈகம் செய்த மாணவர்களின் நினைவாக 2000 ஆண்டு முதல் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடுகளை எல்லைகளாகவும், பொருளாதார ரீதியாகவும் பிரிப்பதற்கு முன்பாகவே ஒவ்வொரு இனத்தின் தனித்துவ அடையாளமாக தாய்மொழி விளங்குகிறது.

வங்கத்தில் மொழிக்காக நடந்த போரை விடவும் தமிழ்ச் சமூகம் தன் தாய்மொழியை காப்பதற்காக பன்னெடுங்காலமாக போர் புரிந்து வருகிறது. எப்போதெல்லாம் தமிழுக்கு இன்னல் நேரும் சூழல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் ஒட்டுமொத்த இனமும் இன்னமும் கொதித்தெழுந்து போராடத்தான் செய்கிறது. தமிழ், தமிழர்களுக்கு வெறும் மொழியாக மட்டுமில்லாமல் உயிராக, உணர்வாக, அடையாளமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. 1937 முதல் இம்மண்ணில் கால்பதிக்க துடிக்கும் இந்திக்கு எதிராக இப்போதும் போராட்டங்கள் தொடர தான் செய்கின்றன. 1938ல் முதல் கட்ட மொழிப்போர் தீவிரமடைந்து தாளமுத்துவும், நடராசனும் தங்கள் இன்னுயிரை தாய்மொழியாக ஈகம் செய்தார்கள். ஒட்டுமொத்த இனமும் கொதித்துக்கொண்டிருந்தது.

நடராசனின் இறுதிஊர்வலத்தில் பேசிய பேரறிஞர் அண்ணா, "அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தையே பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?” என்று உருகினார். பின் 65ல் தீவிரமடைந்த மாணவர்களின் மொழிப்போராட்டத்தால் அதே அண்ணா தமிழகத்தின் முதல்வரானார்.

தாய்மொழியை காப்பதற்காக தமிழர்கள் தங்கள் உயிரையும் ஈகம் செய்ய துணிந்தவர்கள் என்பதை கண்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ந்து தான் போனது. அது இப்போதும் தொடர்கிறது என்பது ஆறுதலான விஷயம். தாய்மொழி காக்க இவ்வளவு உணர்வோடு போராடும் தமிழ்ச்சமூகம், எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. கட்டாய மொழித்திணிப்பிற்கு தான் அப்போதிலிருந்து எதிரானது. தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடாக 'எல்லா மொழிகளையும் கற்போம் நாம் வாழ.. நம் தாய்மொழி தமிழ் காப்போம் இந்த இனம் வாழ'..! என்பது விளங்குவது குறிப்பிடத்தக்கது.

'அன்னை தமிழை காப்போம்.. அனைத்து மொழிகளையும் கற்போம்' என்பதை சர்வதேச தாய்மொழி நாளில் உறுதியாக ஏற்போம்.

click me!