பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 1, 2021, 3:21 PM IST
Highlights

காவல்துறை சார்பில் ராஜஒகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த 24 ஆம் தேதி அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பின் போது ஆசிரியர் ராஜகோபாலன் துண்டு மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணத்துடன் வகுப்பு நடத்துவதும், மாணவர்கள் ஆன்லையில் இருக்கும் போது, குளியல் அறையில் இருந்து வருவது என மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

அதுமட்டுமின்றி பள்ளி வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாணவிகளின் எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்புவது, நள்ளிரவில் போன் செய்து தொல்லை கொடுப்பது, சினிமாவிற்கு வா என கட்டாயப்படுத்துவது என பல்வேறு பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். 

இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையமும்,  காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரண நடத்தி வருகின்றன. 

இதுவரை ராஜகோபாலன் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், ஜாமீன் கோரி அவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதே போல் காவல்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

காவல்துறை சார்பில் ராஜஒகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய காரணம் குறித்து காவல்துறையினர் விளக்கமளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. பாலியல் புகார் விவகாரத்தில் வேறு ஏதாவது ஆசிரியர்களுக்கு தொடர்புள்ளதா உள்ளிட்ட கோணங்களில் ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

click me!