மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி... தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!

By vinoth kumarFirst Published Feb 28, 2022, 12:38 PM IST
Highlights

கடந்த திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கும், இந்த வழக்கின் மூல வழக்கு மற்றும் பிற வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா;- பணியை இழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

click me!